கமல்ஹாசனின் நடுநிலையான பேச்சு, உங்களைப் போன்ற என்டெர்டெய்னர்களுக்கு புரியாது” என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மநீம மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உடல் மொழியால் போலிப் பணிவும், நரம்பில்லாத நாக்கால் தடித்த வார்த்தைகளை தரம் பார்க்காமல் எல்லோர் மீதும் கொட்டுவதும் வழக்கமாக கொண்ட பிஜேபியாலேயே புறக்கணிக்கப்பட்ட அண்ணாமலை இன்று எங்கள் தலைவரைப் பற்றி, ஒரு நாடாளுமன்ற சீட்டுக்காக தன் ஆன்மாவை விற்றுவிட்டவர் என்று கூறியுள்ளார்.
ஆட்களையும், கட்சிகளையும் விலைக்கு வாங்கும் பழக்கமுள்ள பாஜகவும், அந்தக் கட்சியால் காவல் துறையில் இருந்து அரசியலுக்கு விலைக்கு வாங்கப்பட்ட அண்ணாமலையும் இப்படி பேசுவது ஆச்சரியமில்லை. உலகம் புகழும் மாபெரும் கலைஞர், இந்திய அரசின் வருமானத் துறையாலேயே நேர்மையாளர் பட்டம் பெற்றவர், 7 ஆண்டுகள் மய்யம் என்ற புதிய சித்தாந்ததோடு கட்சி நடத்தி வருபவர், பல்துறை வித்தகர் எங்கள் தலைவர் கமல்ஹாசன்.
அவர் ஏற்றுக்கொண்டதால் அந்த எம்.பி பதவி தான் கவுரவம் பெற்றதேயோழிய அவர் தகுதிக்கு இந்தப் பதவி சாதாரணம். மக்கள் பிரச்சினைகளை உரிய இடத்தில் பேச ஒரு வாய்ப்பாக எம்.பி பதவியை எங்கள் தலைவர் கமல் பார்க்கிறாரே தவிர அதை தனக்கான கிரீடமாக பார்க்க வில்லை. அவர் எந்தவொரு பதவியில் இல்லாவிட்டாலும், அவர் குரலை இந்தியா திரும்பிப் பார்க்கும் உங்கள் தலைவர்கள் உட்பட. ஆனால், உம்முடைய குரல் வெறும் ஊடகத் தீனிதான் என்பதை நீங்கள் உணர வேண்டும், அண்ணாமலை.
நடந்த சோக நிகழ்வுக்கு யார் பொறுப்பு என்று ஊடகம் கேட்கும்போது நாம் எல்லோரும்தான் பொறுப்பு என்று கூறியவர் எங்கள் தலைவர் கமல். அவரின் நடுநிலையான பேச்சு உங்களைப் போன்ற என்டெர்டெய்னர்களுக்கு புரியாது என்று கூறிக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.