இன்று நடக்கவிருந்த அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு.
இலங்கை பகுதியில் இருந்து வடமேற்காக நகர்ந்து வரும் ‘டித்வா’ புயல் நாளை அதிகாலை வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும். இதன் காரணமாக, டெல்டா மற்றும் அதை ஒட்டிய கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதி கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று நடக்கவிருந்த அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.
இது குறித்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: ‘டிட்வா’ புயலையொட்டி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கு இன்று அறிவிக்கப்பட்டிருந்த தேர்வுகள் அனைத்தும் தள்ளிவைக்கப்படுகின்றன. அதேபோல, பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற இருந்த தேர்வுகளும் தள்ளிவைக்கப்படுகின்றன. இந்த தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



