புதுச்சேரியில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு முன்கூட்டியே நடத்தப்படும் என்று அம்மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது.. கடும் வெப்பத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர்.. இந்த நிலையில், புதுச்சேரியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு முன்கூட்டியே நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது இந்த தகவலை தெரிவித்தார்.. அப்போது பேசிய அவர், ” 2022-23-ம் கல்வியாண்டுக்கான 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு ஏற்கனவே வரும் 24 தொடங்கி 28-ம் தேதி வரை நடத்த கல்வித்துறை மூலம் திட்டமிடப்பட்டது. இப்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தாலும், காவலர், எல்டிசி, யூடிசி உள்ளிட்ட பல்வேறு தேர்வுகள் நடைபெற இருப்பதாலும் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வை முன்கூட்டியே நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
அதன்படி வரும் 1 முதல் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வரும் 11ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை முழு ஆண்டு தேர்வு நடத்தி முடிக்கப்படும். பத்தாம் வகுப்பு தேர்வுகள் வரும் 20ம் தேதியுடன் முடிகிறது. ஆகவே இந்த தேர்வுக்கு ஒருநாள் முன்னதாகவே அது முடிவடையும். அவர்களுக்கான தேர்வு முடிந்த நாளில் இருந்து மே 31ம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்படும். ஜூன் 1ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும். அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இந்த தேர்வு அட்டவணை பொருந்தும். இன்றே எல்லா பள்ளிகளுக்கும் அதற்கான சுற்றறிக்கை அனுப்பப்பட்டு தேர்வு நடத்துவதற்கான ஆயத்த பணிகளை செய்ய கல்வித் துறை மூலம் அறிவுறுத்தப்படும்.” என்று தெரிவித்தார்..