சென்னை மாநகர போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் டிரைவர் மற்றும் கண்டக்டர் பணியிடங்களில் வடமாநிலத்தை சேர்ந்தவர்களை நியமிக்க முடியாது என்றும், அப்பணிகளுக்கு தமிழ் மொழித் தகுதி கட்டாயம் என்றும் போக்குவரத்துக் கழக நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் நிலவும் கடுமையான பணியாளர் பற்றாக்குறையை சமாளிக்கும் நோக்கில், 1,797 பேருந்து நடத்துனர்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதற்கான பணி உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ‘எஸ்.எஸ். எண்டர்பிரைசஸ்’ என்ற தனியார் நிறுவனத்திற்கு ரூ.61.56 கோடி மதிப்பீட்டில் 11 மாத காலத்திற்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அரசுப் பணி நியமனங்கள் முறையாக நடைபெறாமல், வெளிமாநில நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்ட விவகாரம் தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் மத்தியில் பெரும் சலசலப்பையும் கடுமையான கண்டனங்களையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், எழுந்துள்ள விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்துள்ள போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள், காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்பும் நிர்வாக வசதிக்காக மட்டுமே வெளிமாநில நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டுள்ளதே தவிர, வடமாநிலத்தவர் எவரும் பணியமர்த்தப்பட மாட்டார்கள் என தெளிவுபடுத்தியுள்ளனர்.
மேலும், தமிழகப் போக்குவரத்துக் கழக விதிமுறைகளின்படி ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிகளுக்குத் தமிழ் மொழியில் சரளமாக பேசவும், எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டியது இன்றியமையாத கட்டாய தகுதியாகும் என்றும், எனவே உள்ளூரை சேர்ந்த தமிழ் தெரிந்த நபர்கள் மட்டுமே இப்பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் நிர்வாக தரப்பில் திட்டவட்டமாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
Read More : அமித்ஷா தலைமையில் தென்மாநில முதல்வர்கள் மாநாடு..!! CM விஜய்க்கு முக்கிய பொறுப்பு..!!



