திரையுலகின் முன்னணி நட்சத்திரமும், தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் கதாநாயகனாக நடித்து, அவரது திரையுலகப் பயணத்தின் கடைசி திரைப்படமாக உருவான “ஜனநாயகன்” திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த ஜூலை 23-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. விமர்சன ரீதியாகக் கலவையான கருத்துகளைப் பெற்றபோதிலும், ரசிகர்களாலும் ஆதரவாளர்களாலும் திரையரங்குகளில் இத்திரைப்படம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரவேற்பைப் பெற்றது. அனிருத் இசையமைப்பில் உருவான இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்நிலையில், திரையரங்கு வெளியீட்டைத் தொடர்ந்து ‘ஜன நாயகன்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி ஜீ5 (ZEE5) ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளில் வெளியாகவுள்ளதாக தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. திரையரங்குகளை தொடர்ந்து தற்போது டிஜிட்டல் தளத்திலும் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது விஜய் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : அரசுப் பேருந்துகளில் வடமாநிலத்தவர்களுக்கு பணியா..? உண்மை என்ன..? போக்குவரத்துக் கழகம் பரபரப்பு விளக்கம்..!!



