திருமணமான 7 மாதங்களாக தனது மனைவி வேறு ஒருவரை காதலிப்பதை அறிந்த கணவர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
கிருஷ்ணகிரி திப்பனப்பள்ளியைச் சேர்ந்த ராணுவ வீரர் தனுஷ்குமார் (25) கடந்த 18ஆம் தேதி பாறை மேல் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். சடலத்தின் அருகே பூச்சிக்கொல்லி மருந்துப் பாட்டிலும் செல்போனும் இருந்தன. விசாரணையில், அவர் ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வருபவர் என்றும், விடுமுறைக்காக ஊருக்கு வந்திருப்பதும் தெரியவந்தது.
தனுஷ்குமாருக்கு, கடந்த பிப்ரவரி மாதம் ஒம்பலகட்டு கிராமத்தைச் சேர்ந்த அனிதா என்பவருடன் திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்திற்குப் பிறகு, தனுஷ் மீண்டும் ராணுவத்தில் பணியில் சேர்ந்தார். அனிதா பெரும்பாலும் தன் தாயின் வீட்டிலேயே தங்கி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தனுஷ் போன் செய்வதெல்லாம் அனிதாவின் போன் ‘பிஸி’யாக இருந்ததோடு, வாட்ஸ் ஆப்பில் இரவு முழுவதும் “ஆன்லைன்” எனக் காட்டியிருப்பது அவரது சந்தேகத்தை அதிகரித்தது. பின்னர் நண்பர்களிடம் விசாரித்தபோது, அனிதா மற்றும் அவரது அண்ணி கோமதியின் தம்பி அன்பு இடையே நெருக்கம் இருப்பதை அறிந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த தனுஷ்குமார், மனைவியின் செல்போனைச் சரிபார்த்ததில், அன்புவுடன் உரையாடல்கள், இன்ஸ்டாகிராம் வழியிலான தொடர்புகள் உள்ளிட்டவை கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் ராணுவப் பணியை விட்டு ஊரில் வேலை தேடலாமென யோசித்தும் உள்ளார். ஆனால், மனைவி மற்றும் மாமியார் வீட்டாரின் நடத்தை இவரை மேலும் சோகத்தில் ஆழ்த்தியது.
இறுதியில், கடந்த 17ஆம் தேதி மதியம் 2 மணியளவில், தனுஷ் மது கலந்த பூச்சிக்கொல்லி மருந்து குடித்து உயிரை மாய்த்துக் கொண்டார். உயிரை மாய்த்துக்கொள்ளும் முன், தனது மனைவி அனிதாவுக்கும் தாய் பார்வதிக்கும் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார்.
அதில் “நீ உன் அண்ணியோட தம்பி அன்புவுக்கு மெசேஜ் செய்யுறது, போன் செய்து பேசுறதும் எனக்கு தெரியும். என்னால ஒன்னும் பண்ண முடியல. சரி நீ உன் லைஃப்பை பார்த்துக்கோ, என்னால நீ ஏன் கஷ்டப்பட்டுட்டு இருக்க, பத்திரமா இரு” என மெசேஜ் அனுப்பியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.



