பொதுவாக சில உணவகங்களில் புகைக்கும் அறை என்று தனியாக இருக்கும். அதாவது புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் புகைக்க வசதியாக இந்த அறை அமைக்கப்பட்டிருக்கும். சிலரால் சாப்பிடும் போது புகைபிடிக்காமல் இருக்க முடியாது. புகைத்துக்கொண்டே சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். இதன் மூலம் புகை பிடிக்கும் விரும்பும் நபர்கள் தனியாக புகைக்கலாம்.
அதேபோல் புகைபிடிக்க விரும்பாத நபர்களுக்கும் இதனால் தொல்லை இருக்காது. தனியாக புகைக்க விரும்பும் நபர்கள் அறையில் இருப்பார்கள். மற்ற பொதுமக்கள் பொது அறையில் இருப்பார்கள். புகை, இருமல் போன்ற பிரச்சனைகள் எதுவும் இருக்காது. ஆனால் இது புகைபிடிப்பதை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கை ஆகும். இப்போதெல்லாம் பல உணவகங்களில் இது போல புகைக்கும் அறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அதிக அளவில் கஸ்டமர்கள் வர வேண்டும் என்பதற்காக இதுபோன்ற அறைகள் அமைக்கப்பட்டுவதாக கூறப்படுகிறது. ஆனால், புகைபிடிக்கும் பழக்கம் காரணமாக தீ விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகளும் கூட உள்ளன. இந்நிலையில் தான், உணவகங்களில் புகைக்கும் அறை (Smoking Room) அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. இதற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது.
அதன்படி, உணவுக்கூடங்கள் உள்ளிட்ட எந்த இடத்திலும் புகைபிடிப்பதற்காக அறை திறக்கக் கூடாது. விதிகளை மீறி புகைக்குழல் கூடம் நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஓராண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை மற்றும் ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.