தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியது முதல் வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது.. இதனால் வீடுகளில் ஃபேன், ஏசி மற்றும் கூலர்களின் பயன்பாடு வழக்கத்தை விடப் பலமடங்கு அதிகரித்துள்ளது. சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து தப்பிக்க ஏசி முக்கிய சாதனமாக மாறியுள்ள நிலையில், அதனை சரியாக பராமரிக்காவிட்டால் பெரும் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஏசி வெடிப்பு சம்பவங்களுக்கு மின்சார கோளாறுகள், குளிரூட்டும் வாயு கசிவுகள் மற்றும் இயந்திரத்தில் ஏற்படும் அதிகப்படியான அழுத்தம் போன்றவை முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. இவ்வாறான கோளாறுகள் நேர்ந்தால், உயிர் மற்றும் உடைமைகளுக்கு பெரிய சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனைத் தவிர்க்க, ஏசி வாங்கும் போது தரமான மற்றும் நம்பகமான பிராண்டுகளைத் தேர்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும், ஏசியை நிறுவும் பணியை அனுபவமுள்ள நிபுணர்களிடம் ஒப்படைப்பது அவசியம். தவறான நிறுவல் காரணமாக குளிரூட்டும் வாயு கசிவு ஏற்பட்டு, விபத்து அபாயம் அதிகரிக்கலாம்.
ஏசியின் பராமரிப்பும் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏர் ஃபில்டர்களை குறைந்தது 15 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். ஃபில்டர்களில் தூசி அதிகமாக தேங்கினால், இயந்திரத்தின் செயல்பாட்டில் அழுத்தம் அதிகரித்து கோளாறுகள் உருவாகும். அதேபோல், அவுட்டூர் யூனிட்டையும் அவ்வப்போது பரிசோதிப்பது அவசியம்.
ஏசியில் இருந்து அசாதாரண சத்தம் கேட்பது, மின்சார கட்டணம் திடீரென அதிகரிப்பது, குளிர்ச்சி குறைவது போன்றவை கோளாறுகளுக்கான ஆரம்ப அறிகுறிகளாகும். இத்தகைய அறிகுறிகள் தெரிந்தவுடன் உடனடியாக ஏசியை அணைத்து, தகுந்த டெக்னீஷியனை அழைத்து பரிசோதிக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும், ஏசி அதிக மின்சாரம் பயன்படுத்தும் சாதனமாக இருப்பதால், மின் கோளாறுகள் வெடிப்பு அபாயத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, வோல்டேஜ் ஸ்டேபிலைசர் பயன்படுத்துவதும், ஏசிக்கு தனி மின் இணைப்பு வழங்குவதும் பாதுகாப்பான நடைமுறைகளாகும். அவசரநிலைகளில், ஏசியில் இருந்து புகை அல்லது தீப்பற்றுதல் ஏற்பட்டால், உடனடியாக மெயின் மின் இணைப்பை துண்டித்து, தீயணைப்புத் துறையை தொடர்புகொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வருடத்திற்கு குறைந்தது இரண்டு முறை – கோடை காலம் தொடங்குவதற்கு முன்பும், முடிந்த பின்பும் – ஏசியை சர்வீஸ் செய்வது அவசியம். இதற்காக அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்களைத் தொடர்புகொள்வது பாதுகாப்பானது. மொத்தத்தில், சரியான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றினால், ஏசி வெடிப்பு போன்ற பெரும் விபத்துகளைத் தவிர்க்க முடியும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.



