இன்றைய காலகட்டத்தில், பல இளைஞர்களிடம் “எனக்குக் கிடைக்காதது வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது” என்ற மனநிலை அதிகரித்து வருவது கவலைக்கிடமான ஒன்றாக உள்ளது. சிறுவயதிலிருந்தே பகிர்ந்து கொள்வது, விட்டுக் கொடுப்பது, பிறரின் உணர்வுகளை மதிப்பது போன்ற நல்ல பண்புகளை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது மிகவும் அவசியம். இத்தகைய மதிப்புகள் குறைவதால்தான் காதல், கோபம், பழிவாங்கும் மனப்பான்மை உள்ளிட்ட காரணங்களால் பல கொடூரமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அந்த வகையில், தற்போது கர்நாடகாவில் நடந்துள்ள ஒரு சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா, பண்ட்வால் பகுதியைச் சேர்ந்தவர் 25 வயதான லாவண்யா. அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் செவிலியராகப் வேலை செய்து வந்துள்ளார். வாலிபர் ஒருவர், லாவண்யாவை நீண்ட நாட்களாக ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். ஆனால் லாவண்யா அவரது காதலை ஏற்க்கவில்லை. இந்நிலையில், சம்பவத்தன்று லாவண்யா வழக்கம்போல் தனது பணியை முடித்துவிட்டு, ஊருக்குத் திரும்புவதற்காகப் பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்த பேருந்து ஒன்றில் ஏறி அமர்ந்துள்ளார்.
அப்போது, அவரை ஒருதலையாக காதலித்த வாலிபர், திடீரெனப் பேருந்திற்குள் புகுந்து தான் மறைத்து வைத்திருந்த வாளால் லாவண்யாவை வெட்ட முயற்சி செய்துள்ளார். இதனால் பதறிப்போன லாவண்யா, தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அலறியடித்தபடி பேருந்திலிருந்து கீழே இறங்கிப் பொதுமக்களை நோக்கிக் ஓடியுள்ளார். ஆனால் அவரை விடாமல் துரத்திய அந்த வாலிபர், பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பலரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே லாவண்யாவை வாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த லாவண்யா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, அந்த வாலிபர் பேருந்து நிலையத்திற்கு வெளியே தயார் நிலையில் இருந்த காரில் ஏறித் தப்பியோடிவிட்டார். இந்த கொடூரச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார், லாவண்யாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், பேருந்து நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, தப்பியோடிய கொலையாளியைப் பிடிப்பதற்காகத் தனிப்படைகள் அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பொதுமக்கள் அதிகம் கூடி இருக்கு பகுதியில் நடந்த இந்தத் துணிகரக் கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read: லாட்ஜில் தங்கியிருந்த மலேசிய பெண்… போலீஸ் சோதனையில் வெளிச்சத்துக்கு வந்த ரகசியம்!



