ஒரு காலத்தில் மாலை நேர சிற்றுண்டி என்றாலே வீட்டிலேயே தயாரித்த சுண்டல், அவல், வறுத்த கடலை, நிலக்கடலை, கம்பு அல்லது ராகி கூழ் போன்ற சத்தான உணவுகள்தான் பெரும்பாலான வீடுகளில் இடம் பெற்றன. அவை உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்கியதோடு, நீண்ட நேரம் பசியையும் கட்டுப்படுத்தின. ஆனால், இன்றைய வேகமான வாழ்க்கை முறையால் பலரும் மாலை நேர சிற்றுண்டியாக பஜ்ஜி, சமோசா, சிப்ஸ், பிஸ்கட் மற்றும் ஃபாஸ்ட் ஃபுட் வகைகளையே அதிகம் தேர்வு செய்கின்றனர். இந்த பழக்கம் நீண்ட காலத்தில் உடல்நல பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மாலை நேரங்களில் அடிக்கடி எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பஜ்ஜி, போண்டா, சமோசா, சிப்ஸ் போன்ற உணவுகளில் டிரான்ஸ் கொழுப்பு அதிகமாக இருப்பதால், உடலில் கெட்ட கொழுப்பின் (LDL) அளவு உயர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இதய நோய் மற்றும் மாரடைப்பு ஏற்படும் அபாயமும் அதிகரிக்கலாம். அதேபோல், மைதாவால் தயாரிக்கப்படும் உணவுகளை மாலை நேரங்களில் அதிகமாக சாப்பிடுவதால், ரத்தத்தில் சர்க்கரை அளவு வேகமாக உயரக்கூடும்.
குறிப்பாக, நீரிழிவு நோய் உள்ளவர்கள் அல்லது அதற்கான அபாயத்தில் இருப்பவர்கள் இதுபோன்ற உணவுகளை அளவோடு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மாலை 6 மணிக்குப் பிறகு அதிகமாக டீ, காபி அல்லது கஃபைன் நிறைந்த பானங்களை அருந்துவதும் தூக்கத்தின் தரத்தை பாதிக்கக்கூடும். இதனால் இரவில் தூக்கம் தாமதமாக வருதல் அல்லது ஆழ்ந்த தூக்கம் இல்லாமை போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், பதப்படுத்தப்பட்ட அல்லது அதிகமாக சமைக்கப்பட்ட சிவப்பு இறைச்சியை அடிக்கடி உட்கொள்வதால் சில வகை புற்றுநோய் அபாயங்களும் இருப்பதாக கூறப்படுகிறது.
இரவு நேரத்திற்கு அருகில் மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி போன்ற கனமான இறைச்சி உணவுகளை அதிகமாக சாப்பிடுவது செரிமானத்தை சிரமப்படுத்தலாம். குமாலை நேரங்களில் பசியை போக்க சுண்டல், வேகவைத்த நிலக்கடலை, பழங்கள், முளைகட்டிய பயறுகள், கம்பு அல்லது ராகி உணவுகள், தயிர் போன்ற சத்தான சிற்றுண்டிகளை தேர்வு செய்வது உடலுக்கு அதிக நன்மை தரும். சரியான உணவுப் பழக்கத்தை கடைப்பிடிப்பதன் மூலம் இதய ஆரோக்கியம், செரிமானம் மற்றும் உடலின் ஒட்டுமொத்த நலனையும் பாதுகாக்க முடியும்.
Also Read: கவனம்! வீட்டுக்குள் திடீரென வெடித்த ஃபிரிட்ஜ்… அதிர்ச்சியில் உறைந்த குடியிருப்புவாசிகள்!



