அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு, கிரீன் கார்டு விண்ணப்பங்களுக்கான ‘பொதுச் சுமை’ தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை அமல்படுத்தியுள்ளது.
அதாவது, 2022 ஆம் ஆண்டின் பழைய விதிகளின்படி, அரசின் நேரடி ரொக்க உதவி மற்றும் நீண்டகால மருத்துவமனை பராமரிப்பு ஆகியவை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. ஆனால் புதிய விதிகளின் கீழ், உணவு உதவி (SNAP), மருத்துவ உதவி (Medicaid), மற்றும் வீட்டுவசதி உதவி போன்ற பிற அரசு நலத்திட்ட உதவிகளைப் பெறுவதும் விண்ணப்பதாரரின் தகுதியைத் தீர்மானிக்க பரிசீலிக்கப்படும்.
புதிய விதிமுறைகள் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் தேதியை அடிப்படையாகக் கொள்ளாமல், விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்ட தேதியின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும். அந்தவகையில் இன்று செப்டம்பர் 18, 2026-க்குப் பிறகு தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு புதிய 2026 வழிகாட்டுதல்கள் பொருந்தும்.
டிசம்பர் 23, 2022 முதல் செப்டம்பர் 17, 2026 வரை தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்களுக்கு 2022 விதிகளே பொருந்தும்.
டிசம்பர் 23, 2022-க்கு முன் தாக்கல் செய்யப்பட்டவற்றுக்கு 1999 ஆம் ஆண்டின் இடைக்கால வழிகாட்டுதல்கள் பொருந்தும்.
யாருக்கு இந்தப் புதிய விதிகள் பொருந்தும்?
குடும்ப அடிப்படையிலான, வேலைவாய்ப்பு அடிப்படையிலான மற்றும் ‘டைவர்சிட்டி விசா’ (Diversity Visa) மூலம் நிரந்தரக் குடியுரிமைக்கு (Green Card) விண்ணப்பிப்பவர்கள்.
சில குறிப்பிட்ட மதப் பணியாளர்கள் மற்றும் தற்காலிக அல்லாத (Non-immigrant) விசா விண்ணப்பதாரர்கள்.
அமெரிக்காவிற்கு வெளியில் 180 நாட்களுக்கு மேல் தங்கியிருந்து மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழையும் நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்கள்.
யார் யாருக்கு விலக்கு?
அகதிகள் (Refugees) மற்றும் புகலிடம் கோருவோர் (Asylees).
சிறப்புச் சிறுவர் புலம்பெயர்ந்தோர் (Special Immigrant Juveniles).
ஆள் கடத்தல் மற்றும் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ‘T’ மற்றும் ‘U’ விசா வைத்திருப்பவர்கள்.
VAWA சுயமனுதாரர்கள் மற்றும் தற்போதைய கிரீன் கார்டைப் புதுப்பிப்பவர்கள்.
அமெரிக்க குடியுரிமைக்கு விண்ணப்பிப்பவர்கள் மற்றும் அமெரிக்கக் குடிமக்கள்.
விண்ணப்பங்கள் எவ்வாறு மதிப்பீடு செய்யப்படும்?
USCIS அதிகாரிகள் ஒரு காரணியை மட்டும் பார்க்காமல், விண்ணப்பதாரரின் ஒட்டுமொத்த சூழ்நிலையையும் வயது, ஆரோக்கியம், குடும்ப நிலை, நிதி ஆதாரங்கள் மற்றும் சொத்துக்கள், கல்வி மற்றும் திறன்கள் ஆகிய 5 முக்கிய காரணிகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்வார்கள்.
மேலும், பொதுச் சுமை என்ற ஒரே காரணத்திற்காக ஒரு விண்ணப்பதாரர் நிராகரிக்கப்படும் சூழல் ஏற்பட்டால், தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ‘Public Charge Bond’ செலுத்தும் வாய்ப்பைப் பெறலாம். இது விண்ணப்பதாரர் எதிர்காலத்தில் அரசின் நிதி உதவியைச் சார்ந்திருக்க மாட்டார் என்பதற்கான நிதி உத்தரவாதமாகச் செயல்படும்



