விஜய்யின் பிரச்சர பேருந்தையும், அதன் சிசிடிவி காட்சிகளையும் பறிமுதல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியது.. இந்த தகவல் அறிந்த உடன் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டது..
கரூர் சம்பவம் போன்ற இனி எந்த சம்பவங்களும் நிகழக்கூடாது என்றும், அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க உத்தரவிடக் கோரிய வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது விஜய்யின் பிரச்சார வாகனத்தை ஆபத்தான முறையில் பின் தொடர்ந்து விபத்துக்குள்ளாகும் காட்சிகள் நீதிபதிக்கு காட்டப்பட்டது.. இதை பார்த்த நீதிபதி சில காட்டமான கருத்துகளை தெரிவித்தார்.. மேலும் “ கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வீடியோக்களை பார்க்கும் போது வேதனையளக்கிறது..
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கருணை காட்டுகிறீர்களா? விஜய்யின் பிரச்சார வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டதா? இதுவரை 2 பேரை மட்டும் தான் கைது செய்திருக்கிறீர்களா? விஜய்யின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா? நீதிமன்றம் எல்லாவற்றையும் கண் மூடி வேடிக்கை பார்க்காது.. கட்டுப்படுத்தப்படாத கலவரம் போல் இது நடந்துள்ளது.. சம்பவம் தொடர்பக வழக்குப்பதிவு செய்ய என்ன தடை?
கரூரில் நடந்தது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு.. சட்டத்தின் முன்பு அனைவரும் சமம்.. அரசு அமைதியாக இருக்க முடியாது.. யார் மீது தவறு உள்ளதோ அவர் மீது நடவடிக்கை வேண்டும்.. தவெக என்ன மாதிரியான கட்சி..? மக்களை கைவிட்டு தலைவரும் பொறுப்பாளர்களும் பொறுப்பற்ற முறையில் வெளியேறி உள்ளனர்.. தங்கள் தொண்டர்களை விட்டு விட்டார்கள்.. தலைமைத்துவ பண்பே இல்லை.. சம்பவத்திற்கு பொறுப்பேற்காத தவெகவுக்கு கடும் கண்டனம்..” என்று நீதிபதி காட்டமாக பேசினார்..
இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு விபரங்கள் வெளியாகி உள்ளது.. அதன்படி ஹிட் அண்ட் ரன் வழக்கில் தவெக தலைவர் விஜய்யின் பேருந்தை பறிமுதல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. மேலும் விஜய் பரப்புரை பேருந்தின் உள் மற்றும் வெளிப்புற சிசிடிவி காட்சிகளை பறிமுதல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினாலும் அதில் திருப்தி இல்லை எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்..
வழக்கின் தீவிர தன்மை கருதி சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படுவதாகவும், விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஐஜி அஸ்ரா கார்க் தனக்கு தேவையான அதிகாரிகளை நியமித்து கொள்ளலாம் என்றும் நீதிமன்றத்தின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அரசு அவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது..
மேலும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து உடனடியாக புறப்பட்டு சென்றதற்காக விஜய் மற்றும் பரப்புரை ஏற்பாட்டாளர்களுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்..