பாஜகவில் இருந்து அடுத்தடுத்து விலகிய ஐ.டி. விங் நிர்வாகிகளை அதிமுகவில் இணைத்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவில்பட்டியில் பாஜகவினர் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது செய்தனர்.
பாஜக-வின் ஐ.டி. விங் மாநில தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார், மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கட்சியில் இருந்து விலகுவதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்த சில நிமிடங்களிலேயே எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அதைத் தொடர்ந்து நேற்று மேலும் இரண்டு நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்.
கூட்டணி தர்மத்தை மீறி பாஜக நிர்வாகிகளை அதிமுகவில் இணைப்பதை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம் மணியாச்சி சந்திப்பு பகுதியில் பாஜகவினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் திடீரென்று எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை தீவைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தினேஷ் உள்ளிட்ட 4 பேரை கோவில்பட்டி மேற்கு போலீசார் கைது செய்தனர்.