இந்தியன் பிரீமியர் லீக்கின் 19வது பதிப்பு முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், ஆட்ட மைதானத்தைத் தாண்டி புதிய சர்ச்சை ஒன்று கிரிக்கெட் உலகை அதிர வைத்துள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்
அணிகளுக்கு இடையிலான ஹைதராபாத் போட்டியின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானதிலிருந்து இந்த விவாதம் தீவிரமடைந்துள்ளது.
அந்த வீடியோவில், சிஎஸ்கே விக்கெட் விழுவதற்கு முன்பாக, எஸ்ஆர்ஹெச் ரசிகர் ஒருவர் எலுமிச்சை பழத்துடன் சில சடங்குகளைச் செய்வது போல காட்சி இடம்பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங் அணி, இத்தகைய செயல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பிசிசிஐ-க்கு புகார் அளித்ததாக தகவல்கள் வெளியானது.
இதற்கிடையில், சிஎஸ்கே சார்பில் அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் ஒரு புகார் கடிதம் இணையத்தில் வைரலானது. ஆனால் அது செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலி கடிதமாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அந்தக் கடிதத்தில், “கிரிக்கெட் திறமை மற்றும் வியூகத்தின் விளையாட்டு; சூனியம் போன்ற செயல்களுக்கு இடமில்லை” என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த சர்ச்சையில், ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி இணைந்து, மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளார். அவர் வெளியிட்ட ட்வீட்டில், “இந்தக் கடிதம் போலியானதாகத் தோன்றினாலும், ஐபிஎல் போட்டிகளில் இதற்கு முன்பும் சில அணிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்” என்று கூறியுள்ளார்.
மேலும், 2011 சீசனில் கூட ஒரு அணி உரிமையாளர் எதிரணியின் டிரெசிங் ரூமில் இதுபோன்ற செயல்களை மேற்கொண்டதாகவும், அதுகுறித்து தன்னிடம் ஆதாரங்களுடன் தகவல் வந்ததாகவும் தெரிவித்துள்ளார். மாந்திரீகம் குறித்த இந்த சர்ச்சை உண்மையா, இல்லையா என்பது இன்னும் உறுதியாகத் தெரியாத நிலையில், வைரல் வீடியோக்கள் மற்றும் சமூக வலைதள விவாதங்கள் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read more: தினமும் வேகவைத்த முட்டை சாப்பிடுங்க.. உங்களை தேடி இத்தனை நன்மைகள் வரும்..!



