பெங்களூர் யஸ்வந்த்புரம் பகுதியில் தாய் இறந்தது தெரியாமல் 11 வயது சிறுவன் இரண்டு நாட்கள் அவருடனே வாழ்ந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. பெங்களூர் யஷ்வந்த்புரம் பகுதியைச் சார்ந்தவர் அண்ணம்மாள் வயது 45. இவருக்கு 11 வயதில் சூர்யா என்ற மகன் உள்ளான். கடந்த வருடம் இவரது கணவர் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் அன்னம்மாள் கூலி வேலை செய்து தனது மகனை வளர்த்து வந்திருக்கிறார். அவருக்கு குறைந்த ரத்த அழுத்தமும் சர்க்கரை நோயும் இருந்திருக்கிறது.
இந்நிலையில் அன்னம்மாள் தனது மகனுடன் படுத்து உறங்கிக் கொண்டிருந்தபோது குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக தூக்கத்திலேயே இறந்திருக்கிறார். இதை அறியாத அவரது மகன் தனது அம்மா உறங்கிக் கொண்டிருக்கிறார் என நினைத்து அவருடனே வாழ்ந்திருக்கிறான். வீட்டிலிருந்து பணம் எடுத்துச் சென்று கடையில் சாப்பாடு வாங்கி சாப்பிட்டு வந்திருக்கிறான் சிறுவன். இந்நிலையில் சிறுவனை கடையில் சந்தித்த அவரது தந்தையின் நண்பர்கள் அம்மாவைப் பற்றி கேட்டபோது தனது தாய் இரண்டு நாளாக எழும்பாமல் உறங்கிக் கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கிறான் சிறுவன். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் சிறுவனின் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அவனது தாயார் மரணம் அடைந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஆர்.டி நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அன்னம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சிறுவனிடமும் விசாரணை செய்து வருகின்றனர் .