தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வுக்கு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது..
பள்ளி மாணவர்களின் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்குப்பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப்போன்று தமிழ் மொழி இலக்கியத்திறனை மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் 2022-2023-ம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத்திறனறிவுத்தேர்வு நடத்தப்பட உள்ளதாக தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்திருந்தது.. இத்தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் மாதம் ரூபாய் 1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப்பள்ளி மாணவர்களும் , மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப்பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவர். தமிழ்நாடு அரசின் 10-ம் வகுப்பு தர நிலையில் உள்ள தமிழ்ப்பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும். 2022-2023–ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகைப்பள்ளிகளில் பயிலும் ( CBSE / ICSE / உட்பட) 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 1-ம் தேதி (சனிக்கிழமை) அன்று தேர்வு நடைபெறவுள்ளது.
இந்நிலையில் தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வுக்கு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.. இத்தேர்விற்கு மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளியின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். எனவே, மாணவர்கள் இத்தேர்விற்கான விண்ணப்பங்களை ‘www.dge.tn.gov.in’ என்ற இணையதளம் மூலம் வரும் 22-ம் தேதி முதல் செப்டம்பர் 9 வரை பதிவிறக்கம் செய்து , பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக்கட்டணத்தொகை ரூ.50 சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித்தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..