சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை உட்பட பல்வேறு ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்க, பிரதமர் மோடி சென்னைக்கு 20-ம் தேதி வர இருந்த நிலையில், அவரது பயணம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை-நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயில் சேவை மற்றும் சென்னை-எழும்பூர் ரயில் நிலையத்தில் மத்திய அரசின் திட்டங்கள் உட்பட பல்வேறு ரயில்வே தொடர்பான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருந்தார். இந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக பிரதமரின் சென்னை வருகை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சி பின்னர் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களுக்கு தமிழக பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன் எழுதியுள்ள கடிதத்தில், ‘பிரதமர் மோடி வரும் 20-ம் தேதி வருகை தர இருந்த நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மறு தேதி அறிவித்த பிறகு, திட்டமிட்டபடி சிறப்பான வரவேற்புக்கு ஏற்பாடு செய்வோம்’ என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 6 வழித்தடங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ஏற்கனவே இயக்கப்பட்டு வருகிறது. இதில் சென்னை-கோவை, சென்னை-திருநெல்வேலி, சென்னை-மைசூரு, கோயம்புத்தூர்-பெங்களூரு மற்றும் சென்னை-விஜயவாடா வழித்தடங்கள் அடங்கும். மேலும், சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே வாராந்திர வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்படுகிறது.