தலைநகர் டெல்லியில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்கு பழி வாங்குவதற்காக 25 வயது இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக 3 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
டெல்லியின் நிஜாமாபாத் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 3 சிறுவர்களை கைது செய்து விசாரணை செய்தபோது ஆசாத் அஹமது என்ற 25 வயது இளைஞரை படுகொலை செய்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் அவரது உடலை அருகிலிருந்த பூங்காவில் வைத்து எரிக்க முயன்றதாகவும் வாக்குமூலம் அளித்திருக்கும் நிகழ்வு பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பாக கொலை செய்யப்பட்ட இளைஞரின் உடல் பாதி எரிந்த நிலையில் பூங்காவில் இருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவர்களிடமிருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்களின் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்துள்ளனர்.
இந்தக் கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 16 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட நபர் சிறுவனிடம் தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்ததால் அவரை பழிவாங்குவதற்காக கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட சிறுவர்கள் தெரிவித்துள்ளனர். பாலியல் தொந்தரவால் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.