புதுச்சேரியில் பாஜக நிர்வாகி ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் திருச்சி நீதிமன்றத்தில் நேற்று 7 பேர் திடீரென்று சரணடைந்திருக்கிறார்கள். அதாவது புதுச்சேரி வில்லியனூரை அடுத்துள்ள கணுவாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(45).
மங்கலம் தொகுதி பாஜகவின் பொறுப்பாளரான இவர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் இருக்கின்ற பேக்கரி ஒன்றின் முன்பு நின்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென்று வந்த சில நபர்கள் அவர் மீது மாற்றி வெடிகுண்டை வீசியதுடன் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இது தொடர்பாக வில்லியனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதோடு கொலையாளிகளை தீவிரமாக தேடியும் வருகிறார்கள். இத்தகைய நிலையில், இந்த வழக்கு குறித்து புதுச்சேரி திருக்காஞ்சி பகுதியில் சேர்ந்த நித்தியானந்தம்(43), கொம்பாக்கத்தை சேர்ந்த சிவசங்கர்( 23), கோர்ட் கார்டு பகுதியைச் சேர்ந்த ராஜா( 23), கார்த்திகேயன் (23), தனத்து மேடு பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்( 25), அரியாங்குப்பத்தைச் சேர்ந்த விக்னேஷ் (26), கடலூர் மாவட்டம் கிளிஞ்சி குப்பத்தைச் சார்ந்த பிரதாப் (24) உள்ளிட்ட ஏழு பேர் நேற்று திருச்சி ஜெ.எம்.3 நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். அவர்களை மார்ச் மாதம் 31ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பாலாஜி உத்தரவு பிறப்பித்தார்.