சேத்துப்பட்டு பகுதியில் வீட்டின் மாடியில் இருந்து குதித்து 12ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்டார். பள்ளியில் சில மாணவர்கள் ராகிங் செய்ததால் மனமுடைந்து மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத். தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் கிஷோர் (17 வயது). இவர், கீழ்ப்பாக்கத்தில் உள்ள சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பள்ளியில் படிக்கும் சக மாணவர்கள் குண்டாக இருப்பதால் கேலி செய்ததாக கூறப்படுறது. இதனால் கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் கிஷோர் நேற்று மாலை தனது வீடு உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் இருந்து தனது தாய் கண் முன்னே திடீரென கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கீழ்ப்பாக்கம் போலீசார் தற்கொலை செய்த மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சக மாணவர்கள் தன்னை கிண்டல் செய்வதாக கிஷோர் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக மாணவர் கிஷோர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும், இது தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே சிறுவனின் பெற்றோர் கொடுத்த புகாரில் போலீசார் பள்ளி நிர்வாக பொறுப்பில் உள்ளவர், தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், உள்ளீட்டோரிடம் விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் குழந்தைகள் பாதுகாப்பு நல அமைப்புக்கு கொடுத்த தகவலின் பேரில் சென்னை பாதுகாப்பு நல அமைப்பு விசாரணையை துவக்கியுள்ளது.
Read more: வாட்டி வதைக்கும் வெயில்.. வெப்ப நோய்களிலிருந்து பள்ளி மாணவர்களை பாதுகாக்க நடவடிக்கைகள்..!!