ஈரோடு மாவட்ட பகுதியில் உள்ள கோபிசெட்டிபாளையத்தின் எருமை குட்டை பகுதியில் ராமசாமி என்பவர் தனது மனைவி ஈஸ்வரி மற்றும் மகன்கள் சஞ்சீவ் காந்தி (43), நாகராஜ் (38) ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் சஞ்சீவ் காந்திக்கு திருமணம் ஆகிய நிலையில் 7 வயது மகளுடன் அந்த பகுதியில் உள்ள சின்னகுளம் ஊரில் எலக்ட்ரீசியன் வேலை செய்து கொண்டு வசித்து வந்துள்ளார்.
நாகராஜ் என்பவரும் தனது மனைவி மற்றும் ஒரு வயது மகளுடன் தனது சொந்த ஊரில் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக வாகனம் வைத்திருந்த நிலையில் அதனை ஓட்டி வந்துள்ளாா். இந்த நிலையில் பூா்வீக வீடு தொடா்பாக பெற்றோர்களுக்கும், தம்பியுடனும் சஞ்சீவ் காந்திக்கு பிரச்னை ஏற்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து வியாழக்கிழமை அன்று மாலையில் வீட்டினை பிரித்துக் கொடுக்க சொல்லி நாகராஜிடம் சஞ்சீவ் காந்தி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில் அண்ணன் தம்பி ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கி கொண்டுள்ளனர்.
மேலும் ஏற்கெனவே நெஞ்சு வலியில் சிகிச்சை பெற்று வந்த நாகராஜ், சஞ்சீவ் காந்தி தாக்கியதால் மயங்கி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி காவல்துறையினர் காந்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.