ஜூன் 22, 24 ஆகிய தேதிகளில் ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது .
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர், அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு அனுப்பிய கடிதத்தில்; அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் பணியாளர்களின் கோரிக்கைகளை அறிந்துகொள்ள ஏதுவாகவும், பள்ளிக்கல்வியின் வளர்ச்சி சார்ந்தும் துறையின் அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் சென்னை டிபிஐ வளாகத்தில் ஜூன் 22, 24-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வி முதன்மைச் செயலர் காகர்லா உஷா மற்றும் துறைசார்ந்த இயக்குநர்கள் பங்கேற்க உள்ளனர்.
முதல்நாளில் தலைமை ஆசிரியர், முதுநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், தொழிற்கல்வி ஆசிரியர், சிறப்பாசிரியர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கான கூட்டம் நடைபெறும். 2-வது நாளில், தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள், நூலகர்கள் மற்றும் இதர துறைசார் அலுவலர்கள், பணியாளர்களுக்கான கூட்டம் நடத்தப்படும். இக்கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள சங்கத்தில் இருந்து 3 பேரும், பதிவுசெய்த சங்கங்களில் இருந்து 2 பேரும் பங்கேற்கலாம்.