எர்ணாவூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் கனகராஜ், அதே பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். இருவரும் மீனவர்கள். நேற்று மாலை கனகராஜ், குடிபோதையில் இருந்தார். அந்த வழியாக ஜெயபாலின் மனைவி ஜெயந்தி நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது கனகராஜ், ஜெயந்தியிடம் தகராறு செய்ததுடன், அவரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெயந்தி, தனது கணவர் ஜெயபாலிடம் கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த ஜெயபால், கனகராஜிடம் “ஏன் என் மனைவியை தவறாக பேசினாய்? என்று தட்டிக்கேட்டார். இதனால் இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜெயபால் அருகில் இருந்த இரும்பு கம்பியால் கனகராஜின் பின் மண்டையில் ஓங்கி அடித்தார். இதில் படுகாயம் அடைந்த கனகராஜ் அதே இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயபாலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.