மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், கீழக்கரை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைக்க உள்ளார்கள்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்ச்சமுதாயத்தின் முக்கிய பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் விழா கொண்டாடப்படும் வேளையில் தமிழ்நாடு முழுவதிலும் காளையை இளைஞர்கள் அடக்கும் வீரத்தைப் புலப்படுத்தும் ஏறுதழுவுதல் விழா நடைபெறும். தமிழர்களின் பெருமைக்குரிய தொழிலாக பழங்காலத்திலிருந்து திகழ்ந்து வருவது உழவுத் தொழில். “சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்” என்றார் வள்ளுவர். அத்தகைய உழவுத் தொழிலுக்கு முதன்முதலில் தேவைப்பட்டது “காளை”. அந்நாளில் காடுகளில் திரிந்த காளைகளைப் பிடித்து அடக்கிப் பழக்கி உழவுத் தொழிலில் ஈடுபடுத்தி வந்தனர் தமிழ் மக்கள். அதன் தொடர்ச்சியாகத்தான், மாடு பிடிக்கும் விழா, ஏறு தழுவுதல், எருது விடுதல், மஞ்சு விரட்டு,ஜல்லிக்கட்டு எனப் பல பெயர்களில் தமிழ்ச் சமுதாயத்தில் வழிவழியாக நடைமுறையில் இருந்து வந்துள்ளது.
இந்த மாடுபிடி விழாவை, ஒன்றிய அரசு விலங்குகள் வதைச் சட்டத்தின் துணைகொண்டு தடைவிதிக்க முனைந்தபோது, தமிழனின் பண்பாட்டு உரிமை எனத் தன்னெழுச்சியாகச் சீறி எழுந்த தமிழ்நாட்டு இளைஞர்களால், இந்திய உச்சநீதிமன்றமே தடையை விலக்கி அனுமதி வழங்கிய வரலாறு இந்த விழாவின் வெற்றி முத்திரையாகப் புகழ் படைத்தது. இன்று எட்டுத்திக்கும் போற்றும் இன்பத் தமிழ்த் திருநாட்டின் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அன்று எதிர்க் கட்சியாக இருந்தபோதே மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெற்று வந்த இந்த ஏறுதழுவுதல் விழாவை முன்னின்று நடத்தித் தந்தார்கள்.
ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின் அலங்காநல்லூரில் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் அமைக்கப்படும் என அறிவித்தார்கள். அந்த அறிவிப்பைச் செயற்படுத்தும் விதமாக மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் கட்டப்படுவதற்காக 3.2.2023 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரூ.62 கோடியே 77 இலட்சத்து 62 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு; 18.3.2023 அன்று கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை மூலம் வாடிவாசல், ஒரே நேரத்தில் 5,000 பார்வையாளர்கள் அமர்ந்து காணும் வசதிகளுடன் மூன்றடுக்குப் பார்வையாளர் மாடம், ஏறுதழுவுதல் நடைபெறும் இடம், மிக முக்கிய விருந்தினர்கள் அமரும் இடம், ஏறுதழுவுதலில் பங்குபெறும் காளைகளின் எழுச்சி வடிவங்களைப் புலப்படுத்தும் அருங்காட்சியகம்.
ஒலி-ஒளி காட்சிக்கூடம், கால்நடை மருந்தகம், நூலகம், மாடுபிடி வீரர்களுக்கான தங்கும் அறைகள், புல்வெளிகளுடன்கூடிய தோட்டம் என அனைத்தையும் கொண்டுள்ள 83,462 சதுரடி பரப்புடைய மிகப் பிரம்மாண்டமான கட்டடமாக ஏறுதழுவுதல் அரங்கம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இது, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி தைத் திங்களில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்திவரும் விவசாயிகளுடன் இணைந்து கட்டப்பட்டுள்ளது. தமிழர் நலம் காப்பதைத் தனது தலையாய பணியாகக் கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழர்தம் மகத்தான பண்பாட்டுச் சின்னமாக வெடுத்துள்ள ஏறுதழுவுதல் அரங்கத்தினை இன்று காலை 10 மணிக்கு அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்திற்கு வருகைதந்து திறந்து வைக்கிறார்கள்.