மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரைச் சார்ந்த பெண் ஒருவரை அவரது கணவர் பதவி உயர்வுக்காக தனது நிர்வாகத்தின் மேல் அதிகாரிகளுடன் நெருக்கமாக இருக்க வற்புறுத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ள சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சார்ந்த பெண் மகாராஷ்டிரா மாநிலம் பூனேவை சார்ந்த அமித் சப்ரா என்பவருக்கு திருமணம் முடித்து வைக்கப்பட்டார். திருமணத்திற்குப் பிறகு அமித் தனது மனைவியை தான் வேலை செய்யும் நிறுவனத்தின் மேல் அதிகாரிகளுடன் பதவி உயர்வுக்காகவும் பொருளாதார தேவைகளுக்காகவும் நெருக்கமாக இருக்க வற்புறுத்தியதாக இந்தூர் நீதிமன்றத்தில் புகார் அளித்திருக்கிறார் அந்த பெண்.
மேலும் அவர்களது மாமியார் வீட்டில் கணவரின் சகோதரர் ராஜ் என்பவர் தொடர் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாகவும் அந்த புகாரில் தெரிவித்திருக்கிறார். அவரின் பாலியல் தொல்லை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் ஒரு முறை தற்கொலைக்கும் முயன்றதாகவும் அதன் பிறகும் அவர்களது நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 2020 ஆம் ஆண்டு தனது மாமியார் வீட்டில் இருந்து தாய் வீட்டிற்கு வந்ததாகவும் அப்போது காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டதில் அமித், தான் மனைவியை கொடுமை செய்வதில்லை என காவல்துறையிடம் எழுதிக் கொடுத்துவிட்டு இவரை அழைத்து சென்றதாகவும் தெரிவித்துள்ளார். ஆனாலும் மீண்டும் அவரது இல்லத்திற்குச் சென்றபோது அந்தக் கொடுமைகள் எதுவுமே மாறவில்லை என தெரிவித்த அந்தப் பெண் தற்போது நீதிமன்றத்தின் உதவியை நாடியிருப்பதாக அந்தப் புகார் மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். இதனை விசாரித்த நீதிமன்றம் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரித்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பெண்கள் நல வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது.