சென்னை கோடம்பாக்கம் பகுதியில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் தான் வாழும் அடுக்குமாடி வீட்டின் பத்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை கோடம்பாக்கம் அம்பேத்கர் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ராமசுப்பு. இவர் தெற்கு ரயில்வேயில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது மெட்ரோ ரயில் நிர்வாகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது இளைய மகள் நித்யஸ்ரீ. சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் மருத்துவம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இன்று காலை வெளியே செல்வதாக கூறி விட்டு சென்ற நித்யஸ்ரீ தான் குடியிருந்த வீட்டின் பத்தாவது மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். பத்தாவது மாடியில் இருந்து குதித்ததால் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த தகவலறிந்து வந்த அசோக் நகர் காவல் துறையினர் உடலை கைப்பற்றிய பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையின் விசாரணையில் இறப்பதற்கு முன் நித்யஸ்ரீ கடிதம் ஒன்று கிடைத்திருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் அவர் ” இது நானாக எடுத்துக் கொண்ட முடிவு எனக்கு கிடைத்த அப்பா அம்மா மிகவும் நல்லவர்கள்” என்று அந்த கடிதத்தில் எழுதி இருக்கிறார். இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் இது தொடர்பாக மேலும் தீவிரமான விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.