திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் செவிலியரின் கவனக்குறைவால் பிறந்த குழந்தை கீழே விழுந்து மரணமடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டிக்கு அருகே உள்ள கிராமத்தைச் சார்ந்தவர் சந்தியா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் பிரசவத்திற்காக ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அப்போது இவருக்கு பணிக்குடம் உடைந்ததால் மேலும் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு இவரை அனுப்பி வைத்தனர். அங்கு சுகப்பிரசவத்தில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆயினும் குழந்தையை பெற்றோரிடம் காட்டாமல் வென்டிலேட்டரில் இருப்பதாக தெரிவித்து வந்திருக்கின்றனர் மருத்துவர்கள். இந்நிலையில் குழந்தை பிறந்து ஒரு வாரம் கழித்து குழந்தை இறந்து விட்டதாக அதன் பெற்றோரிடத்தில் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்த சம்பவம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் பெண்ணிற்கு பிரசவம் பார்க்கும் போது செவிலியர் ஒருவர் ஒரு கையில் செல்போனையும் மறுக்கையில் குழந்தையையும் வைத்திருந்ததாகவும் அப்போது குழந்தை தவறி கீழே விழுந்ததில் மரணமடைந்ததாகவும் அந்தக் குழந்தையின் பெற்றோர் குற்றம் சாட்டினர். மேலும் கவன குறைவில் குழந்தையை கொன்ற செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு நிலவியது.