சென்னையில் கால்பந்தாட்ட மாணவி மரணத்தை அடுத்து மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சையின்போது உயிரிழப்புக்கான காரணங்கள் பற்றி ஆராய்வதற்காக சிறப்பு தணிக்கை குழு உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த மாணவி பிரியா, அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்தார். இதில், கவனக்குறைவாக செயல்பட்ட பெரியார் நகர் புறநகர் மருத்துவமனை எலும்பு முறிவு துறை மருத்துவர் பால்ராம் சங்கர், சோமசுந்தரம் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், ’’பாதுகாப்பான அறுவை சிகிச்சை நெறிமுறைகள் மற்றும் சரிபார்ப்பு பட்டியல்’’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், மா.சுப்பிரமணியன், ’’தமிழ்நாடு முழுவதும் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான பாதுகாப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை எடுத்துரைக்கும் வகையில் இந்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், அறுவை சிகிச்சையின்போது கடைபிடிக்கப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பாக இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது. அறுவை சிகிச்சையில் ஏற்படும் இறப்புகளின் காரணங்கள் குறித்து தணிக்கை செய்ய உள்ளோம். தமிழ்நாட்டில் மதுரை, கோவை, திருச்சி, சென்னை ஆகிய நான்கு மண்டலங்களில் சிறப்பு தணிக்கை குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஒவ்வொரு குழுவிலும் 4 அறுவை சிகிச்சை நிபுணர்கள் உள்ளனர். என தெரிவித்தார்.
மெட்ராஸ்-ஐ குறித்து அவர் கூறுகையில், இந்நோயை பொறுத்தவரை மூன்றில் இருந்து 5 நாட்கள் வரைக்கும் பாதிப்பு இருக்கும். எனவே பாதிப்பு இருப்பவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின்னர் மருந்தை பயன்படுத்த வேண்டும். பருவமழை தொடங்கியுள்ளதால் டெங்கு பாதிப்பும் உள்ளது. 11 மாதங்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். என அவர் தெரிவித்தார்.