2023ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிப் போட்டி இந்தாண்டு இறுதியில் எல் சால்வடார் நாட்டில் நடைபெறுகிறது. இதில், பங்கேற்க ஒவ்வொரு நாட்டு பெண்களிடமும் அழகிப் போட்டி நடத்துவது வழக்கம். இதேபோல், இந்தோனேசியா சார்பில் அழகி போட்டியில் பங்கேற்கும் அழகியை தேர்ந்தெடுக்க கடந்த 29 முதல் ஆகஸ்ட் 3 வரை போட்டி நடைபெற்றது. இதில் பேபியனே நிகோல் குரோன்வெல்ட் என்ற அழகி தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், இந்த போட்டியில் பங்கேற்ற 6 அழகிகள், போட்டி நடத்திய நிறுவனம் மீது பாலியல் புகார் அளித்துள்ளனர். அதில், ”எங்கள் உடலில் தழும்பு இருக்கிறதா என பரிசோதிக்க ஆடைகளை களைந்துவிட்டு பரிசோதனை நடத்தினர். ஆண்கள் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் இருந்த ஹோட்டல் அறையில் நிர்வாணமாக வரவழைத்தனர். மேலும், மேலாடையின்றி புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று போலீசிடம் அளித்த புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இதனையறிந்த அமெரிக்கா மிஸ் யுனிவர்ஸ் அமைப்பு, இந்தோனேசியாவை சேர்ந்த நிகழ்ச்சி அமைப்பாளரான பி.டி.கேபல்லா ஸ்வஸ்திகா கார்யா நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தது. மேலும், மலேசியாவிலும் அழகிப் போட்டி நடத்த இதே நிறுவனம் உரிமம் பெற்றிருந்தது, தற்போது அந்த உரிமத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில், அந்நிறுவனத்தின் உரிமையாளர் தனக்கும் அந்த பாலியல் தொல்லைக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்றும் அத்தகைய சோதனையை தான் நடத்த சொல்லவில்லை என்றும் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து போட்டியில் பங்கேற்ற அழகிகளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.