யுபிஎஸ்சி மற்றும் எஸ்எஸ்சி நடத்தப்படும் தேர்வுகளான, நீட், ஜேஇஇ, கியூஇடி போன்ற நுழைவுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவுகள், முறைகேடுகள் மற்றும் திட்டமிடப்பட்ட முறைகேடுகளைத் தடுக்க “பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகள் தடுப்பு) மசோதா, 2024”-ஐ மத்திய அரசு மக்களவையில் அறிமுகப்படுத்தியது. இந்த மசோதாவை மத்தியப் பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தாக்கல் செய்தார்.
நியாயமற்ற வழிமுறைகளைத் தடுக்கும் மசோதா, 2024″ யூபிஎஸ்சி, எஸ்எஸ்இ, ரயில்வே, வங்கித்துறை போன்ற ஆட்சேர்ப்புத் தேர்வுகள் மற்றும் தேசியத் தேர்வு முகமையால் கணினி அடிப்படையில் நடத்தப்படும் அனைத்துத் தேர்வுகளுக்கும் பொருந்தும். மோசடியைத் தடுக்கக் குறைந்தபட்சம் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கவும், மோசடி, திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, குறைந்தபட்சம் ரூ.1 கோடி அபராதம் விதிக்கவும் இந்த மசோதா வகைசெய்கிறது.
இந்த மசோதா பண ஆதாயங்களுக்காக நியாயமற்ற வழிகளில் ஈடுபடும் கும்பல்கள் மற்றும் நிறுவனங்களைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால் இது தேர்வர்களை அதன் விதிகளிலிருந்து பாதுகாக்கிறது. கடந்த சில ஆண்டுகளில், வினாத்தாள்களின் கசிவு, திட்டமிட்ட மோசடிகள் ஆகியவை காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிப்படைந்துள்ளதாகக் கூறி ஜிதேந்திர சிங், மசோதாவின் தேவை மற்றும் முக்கியத்துவத்தை விளக்கினார்.