புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அளவில் குறைவாக இருக்கக்கூடும். பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடலின் கிழக்குப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடலின் கிழக்குப்பகுதிகளில் நிலை கொண்டுள்ளது.

இது அடுத்த இரண்டு தினங்களில் மேற்கு, வடமேற்குத் திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடையக்கூடும். அதன் பிறகு தொடர்ந்து மேற்கு வடமேற்குத் திசையில் நகர்ந்து ஜன 31-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து பிப்ரவரி 1-ம் தேதி இலங்கை கடற்பகுதியை சென்று அடையக்கூடும். இதன் காரணமாக, வடதமிழ்நாடு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 29-ம் தேதி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 30-ம் தேதி தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 31-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியசாகவும் குறைந்தபட்சமாக 22 டிகிரி வரையும் இருக்கக்கூடும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் சூறாவளி காற்று அதிகபட்சமாக மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் 31-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.