கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது. 168 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 21 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18ஆம் தேதி சட்ட விரோதமாக விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி சிலர் குடித்துள்ளனர். இதில், உடல்நலம் பாதிக்கப்பட்டு 19ஆம் தேதி இரவு 11 மணி நிலவரப்படி 17 பேர் உயிரிழந்தனர். நேற்று மாலை நிலவரப்படி, உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40ஆக இருந்தது. இதில் 3 பேர் பெண்களும் அடங்குவர்.
உயிரிழந்தவர்களில் 31 பேரின் உடல்கள், உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டன. கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரத்தில் மட்டும் 26 பேர் உயிரிழந்ததால் அந்தப் பகுதியே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. அப்பகுதியில், மேலும் பலரது உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவர்களும் அடுத்தடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அந்த வகையில், கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைகள் மற்றும் புதுச்சேரி ஜிப்மரில் 168 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதில் 21 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள சிலர் திடீரென கண் பார்வை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், கடும் வயிற்று வலி இருப்பதாகவும் கூறியதால், பரபரப்பான சூழல் காணப்பட்டுள்ளது. அவர்களுக்கு மருத்துவர்கள் உடனுக்குடன் முதலுதவி சிகிச்சை அளித்து வருகின்றனர். நேற்றும் சிலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், இன்று (ஜூன் 21) காலை நிலவரப்படி, உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஆக அதிகரித்துள்ளது. இதில், 21 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
Read More : விஜய்யின் காலில் விழ சொன்ன தவெக நிர்வாகி..!! தீயாய் பரவும் வீடியோ..!! உண்மை என்ன..?