fbpx

நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும்.! விசிக தலைவர் திருமாவளவன்

சுங்கச் சாவடிகளில் கட்டணங்களை உயர்த்தக் கூடாது என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணம் செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் உயர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தக் கட்டண உயர்வை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். இதை உடனடியாக நிறுத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை முகமையினால் பராமரிக்கப்படும் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. அவற்றுள் 25 சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கட்டணம் உயர்த்தப்படவுள்ள சுங்கச்சாவடிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் விக்கிரவாண்டி, மொரட்டாண்டி சுங்கச்சாவடிகளும்; ஓமலூர், சமயபுரம், கிருஷ்ணகிரி சுங்கச்சாவடிகளும் அடங்கும். இந்த சுங்கக் கட்டண உயர்வு சரக்கு கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும். அதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும். இறுதியில் இந்த கட்டண உயர்வால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழை எளிய மக்கள்தாம். ஏற்கனவே பல்வேறு விதமான வரிகளை சுமத்தி ஏழை,எளிய மக்களை கசக்கிப் பிழியும் மத்திய பாஜக அரசு சுங்கச்சாவடி கட்டணங்களில் மூலமாகவும் பொதுமக்களைத் துன்புறுத்தி வருகிறது. இந்நிலையில் மேலும் கட்டணத்தை உயர்த்துவது அநீதியானது.

சாலை வசதியென்பது ஒரு அரசு குடிமக்களுக்கு செய்து தர வேண்டிய அத்தியாவசிய வசதியாகும். அது ஆடம்பரம் அல்ல. அந்த அத்தியாவசிய வசதியை செய்து தருவதற்கு இப்படி குடிமக்களிடம் கட்டணம் வசூலிக்கும் கொடுமை ஒரு ஜனநாயக நாட்டில் தொடரக்கூடாது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது ‘காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள் ஒழிக்கப்படும்’ என வாக்குறுதி அளித்தன. மக்களின் மனநிலையைப் புரிந்து கொண்டே அந்த வாக்குறுதி முன்வைக்கப்பட்டது. இதை மத்திய பாஜக அரசு உணர வேண்டும்.

இன்சூரன்ஸ் பிரிமியத்தின் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கக்கூடாது’ என மனித நேயத்தோடு நிதி அமைச்சருக்குக் கடிதம் எழுதிய மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக அகற்றுவதற்கு முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

English Summary

Customs booths should be removed across the country

Vignesh

Next Post

'A1/A2' பால் விளம்பரங்களை தடை செய்யும் உத்தரவை வாபஸ் பெற்றது FSSAI!

Tue Aug 27 , 2024
FSSAI withdraws order banning 'A1/A2' milk ads

You May Like