சீனாவில் கோவிட் தொற்று மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், சீன மக்கள் இந்த நோயை எதிர்த்துப் போராட உள்ளூர் வைத்திய முறைகளை கையாள தொடங்கியுள்ளனர். இதனால் எலுமிச்சை பழத்தின் தேவை அங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் முன்னெப்போதும் இல்லாத மரபணு மாற்றத்தை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. கூடுதல் வீரியமாகவும் இந்த வைரஸ் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வகை வைரஸ் தாக்கி சீனாவில் நூற்றுக்கணக்கானோர் இறந்து வருவதாக ஹாங்காங் மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் தெரிவிக்கின்றன. ஆனால், சீனா இந்த மரணங்களை வெளி உலகுக்கு தெரியாமல் மறைப்பதாக அவர்கள் கூறுகின்றனர். இந்த கொரோனா பெருந்தொற்று சீனாவில் 3 அலைகளாக தாக்கும் என்றும், அடுத்த 3 மாதங்களில் லட்சக்கணக்கானோர் அங்கு உயிரிழப்பார்கள் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பெய்ஜிங் மற்றும் ஷாங்காயில் வசிப்பவர்கள் தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விட்டமின் சி நிறைந்த உணவுகளை அதிக அளவில் வாங்குவதால் எலுமிச்சை பழத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது ஏற்பட்டுள்ள எலுமிச்சை பழத் தேவைக்கு தினமும் 14 மணி நேரம் செலவிடுவதாக சீனாவின் எலுமிச்சை உற்பத்தி விவசாயிகள் தெரிவிப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வாரத்திற்கு 5 முதல் 6 டன் எலுமிச்சை பழங்களை விற்பனை செய்து வந்ததாகவும், தற்போது 30 டன்களை விற்பனை செய்வதாகவும் சீன ஊடகங்களுக்கு விவசாயி ஒருவர் தெரிவித்துள்ளார். தேவை அதிகம் இருப்பதால் அதன் விலையும் இருமடங்காக அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.