டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்டவிரோதமானது என்று அறிவிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை கடந்த மாதம் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நடத்தியது. டாஸ்மார்க் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் அளவில் ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை மிகப்பெரிய குற்றச்சாட்டை முன்வைத்தது. இதையடுத்து சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்தக் கூடாது என தடை விதிக்கக் கோரியும் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, அமலாக்கத் துறையின் மேல் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதிகள் விலகியதை அடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்து வந்தது.
இந்த அமர்வு, கடந்த 8-ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு விசாரித்தது. அமலாக்கத்துறை தரப்பிலும், தமிழக அரசின் மற்றும் டாஸ்மாக் நிறுவனம் தரப்பிலும் தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் தங்களது வாதங்களை முன்வைத்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த 21 ஆம் தேதி நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் தீர்ப்பளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வானது டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்ட விரோதமானது அல்ல என கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர். டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறையின் விசாரணை தொடரலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.