சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அனுமதி பெறாமல் போராட்டம் நடத்திய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக எம்எல்ஏ., க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டசபை இரண்டாவது நாளாக நேற்று கூடியது. பேரவைத் தலைவர் வினாக்கள் விடைகளுக்கான நேரத்தை தொடங்கினார். அப்போது, இ.பி.எஸ். தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு அங்கீகரிக்க கோரி முழக்கங்களை எழுப்பினர்.
இதனால், சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து சட்டசபையில் இருந்து வெளியேறிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் அப்பாவு தி.மு.க. தலைவர் ஆதரவாக செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
இதற்கு விளக்கம் கேட்ட நிலையில்,
சட்டம், ஒழுங்கு பிரச்சினை காரணமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்று காலை முதலே சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அதிமுகவினர் கருப்பு சட்டை ஆணிந்து போராட்டத்தில் ஈடுபட தயாராக இருந்தனர்.
போராட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். போராட்டத்தின் குறியீடாக கருப்பு உடையணிந்து ஈபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை தடையை மீறி சென்னை வள்ளுவர் கோட்டம் முன் , கருப்பு சட்டை அணிந்து இபிஎஸ் உள்ளிட்ட 62 அதிமுக எம்எல்ஏக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் .
அப்போது சட்டமன்றத்தில் ஜனநாயக படுகொலை நடந்ததாக கூறி , திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர் . இதையடுத்து , இபிஎஸ் தரப்புக்கும் , போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட , இபிஎஸ் உள்ளிட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.