2021- சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.. அதன்படி அங்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.. இதனிடையே கடந்த 4-ம் தேதி திருமகன் ஈவெரா மாரடைப்பால் காலமானார். பொதுவாக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் உயிரிழந்தால், அந்த தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.. அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது..
ஜனவரி 31-ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கும் என்றும், பிப்ரவரி 7-ம் தேதி மனுத்தாக்கல் முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.. பிப்ரவரி 8-ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும் என்றும், மனுக்களை திரும்ப பெற பிப்ரவரி 1-ம் தேதி கடைசி நாளாகும்.. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2-ம் தேதி எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.. ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி மாவட்ட தேர்தல் அதிகாரியாக செயல்படுவார் என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் மறைந்த எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ராவின் தந்தையான ஈவிகேஸ் இளங்கோவன் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது..
அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில் அந்த கூட்டணி சார்பில் யார் போட்டியிடக்கூடும் என்பது விரைவில் தெரியவரும் என்று கூறப்படுகிறது.. மேலும் கடந்த 2021 தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்திருந்த நிலையில், இந்த இடைத்தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.. மேலும் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளின் நிலைப்பாடு ஓரிரு நாட்களில் தெரியவரும் என்று கூறப்படுகிறது..