மத்திய அரசாங்கம் ரூ.10,000 கோடி கொடுத்தாலும், தேசிய கல்விக் கொள்கை மற்றும் பிஎம்ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்து போட மாட்டேன் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தேசிய கல்விக் கொள்கை மற்றும் பிஎம்ஸ்ரீ திட்டங்களில் கையெழுத்து போடாததால் தமிழ்நாடு ரூ.5,000 கோடி நிதியை இழக்கும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து தமிழ்நாடு அரசு சார்பில், தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்று பதில் கடிதம் அனுப்பப்பட்டது. இந்நிலையில் தான், கடலூரில் நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் கழக மாநாட்டில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, “தமிழ்நாட்டின் கல்வி தரத்தை மத்திய அரசு பொருளாதார ஆய்வறிக்கையில் பாராட்டியுள்ளது. ஆனால், இன்னொரு பக்கம் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை மறுக்கின்றனர். தமிழ்நாட்டிற்கான ரூ.2,152 கோடி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. நாம், தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால், நிதி தர மறுக்கிறார்கள். தேசிய கல்விக் கொள்கை என்பது தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் வேட்டு வைக்கக் கூடிய கொள்கை.
இந்தியை திணிக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே இந்த கல்விக் கொள்கையை நாங்கள் எதிர்க்கவில்லை. இது மாணவர்களை பள்ளியில் இருந்து துரத்தும் கொள்கை. 3, 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தி அவர்களை வடிகட்ட பார்க்கிறார்கள். 9 – 12ஆம் வகுப்பு வரை செமஸ்டர் தேர்வு முறையை கொண்டு வர முயற்சிக்கிறார்கள். கல்லூரியில் சேர்வதற்கு கூட தேசிய அளவில் தேர்வு வைக்கிறார்கள். அதேபோல், 10ஆம் வகுப்பு முதல் பட்டப்பிடிப்பு வரை படிப்பை தொடர விரும்பாத மாணவர்கள், அவர்களாகவே விலகலாம் என்று அந்த கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் கையெழுத்து போட்டால் மட்டுமே ரூ.2,152 கோடி நிதி கிடைக்கும். ஆனால், ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் கையெழுத்து போட மாட்டோம். இந்த நிதிக்காக கையெழுத்து போட்டால் 2 ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிடுவோம். அந்த பாவத்தை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஒருபோதும் செய்ய மாட்டான்” என்று தெரிவித்துள்ளார்.