Trump: வரும் 13ம் தேதிக்குள் வேலை செய்யாமல் ஏமாற்றி கொண்டிருக்கும் தேவையற்ற அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபராக, டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் பதவியேற்றார். அரசு நிர்வாகத்தில் செலவுகளை குறைக்கவும், நிர்வாகத்தை சீரமைக்கவும், டி.ஓ.ஜி.இ., எனப்படும் சிறந்த நிர்வாகத்துக்கான துறை என்ற அமைப்பை அவர் உருவாக்கியுள்ளார். இதன் தலைவராக, பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் உள்ளார். இந்தத் துறை, ஏற்கனவே, பல துறைகளைச் சேர்ந்த ஊழியர்களை விடுமுறையில் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத் தவிர, பலர் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது.
அப்போது, மார்ச் 13ம் தேதிக்குள், தேவையற்ற அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் உத்தரவிட்டார். அரசு ஊழியர்களில் பலர், வேலையை செய்யாமல் ஏமாற்றிக் கொண்டிருப்பதாகவும், இதனால் அரசுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்படுவதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டினார். ஒவ்வொரு அரசு துறையும், தங்கள் ஊழியர்களில் எத்தனை பேரை வேலை நீக்கம் செய்ய முடியும் என்ற திட்டத்தை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்ற எலான் மஸ்க் அதிகமான செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இந்த ஆண்டில் பட்ஜெட்டில் 1 டிரில்லியன் டாலர்கள் திட்டங்கள் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என எலான் மஸ்க் தெரிவித்தார்.
இதற்கிடையே, பட்ஜெட்டில் சுகாதாரம் மற்றும் ஓய்வூதிய சலுகைகள் உள்ளிட்ட திட்டங்களுக்கு எந்த பாதிப்பும் வராது என டிரம்ப் உறுதிப்படுத்தி உள்ளார். டிரம்ப் பதவியேற்றதில் இருந்து, அரசு ஊழியர்களில் 1 லட்சத்திற்கு அதிகமானவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: பெற்றோர்களே உஷார்!. தட்டம்மையால் முதல் மரணம்!. அறிகுறிகள்; தடுப்பதற்கான வழிகள் இதோ!