தமிழகத்தில் கடந்த வருடம் சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெற்றது, அந்த தேர்தலில் திமுக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி ஆட்சியில அமர்ந்தது.திமுக ஆட்சியில் அமர்ந்தவுடன் தமிழகத்தில் போதை பொருட்களை கட்டுப்படுத்த போகிறோம் என்று தெரிவித்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.அதற்கேற்றார் போல தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு போதை பொருள் உபயோகத்தை தடுக்கும் விதமாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
ஆனால் இவை நடைபெறுவதற்கு முன்னால் கூட தமிழகத்தில் போதை பொருள் பழக்கம் சற்றே குறைவாகத்தான் இருந்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து எப்போது போதை பொருளை நாங்கள் கட்டுப்படுத்துவோம் என்று தெரிவித்து நடவடிக்கைகளில் இறங்கியதோ அன்றிலிருந்து தமிழகத்தில் போதை பொருள் பழக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டது.
மதுரை பெருங்குடி வளையங்குளம் பகுதியில் தனிப்படை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்குரிய விதத்தில் பயங்கர ஆயுதங்களுடன் மறைந்திருந்த 5 பேர் காவல்துறையினரை பார்த்தவுடன் தப்பியோட முயற்சி செய்தார்கள். உடனடியாக அவர்களை சுற்றி வளைத்து கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் பெருமாள் நகரச் சேர்ந்த கருப்புசாமி, காளிஸ்வரன், லட்சுமணன், லிங்கபெருமாள், அஜித்குமார், உள்ளிட்டோர் தான் இந்த பயங்கர ஆயுதங்களுடன் இருந்தனர் என்று தெரியவந்தது. ஐந்து பேரும் ஒன்றாக இணைந்து அந்த வழியாக வருபவர்களிடம் வழிப்பறி செய்ய திட்டமிட்டிருந்ததுடன், போதை மாத்திரைகளை விற்பனை செய்ததும் இந்த விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து அவர்களிடம் சோதனை நடத்தப்பட்டதில் 2 பெரிய வாள் மற்றும் 580 போதை மாத்திரைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டனர். மேலும் அவர்கள் மீது வழிப்பறி, கொலை முயற்சி, போதைப்பொருள் வைத்திருத்தல் போன்ற 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் சிறையிலடைத்திருக்கிறார்கள்.
மதுரை மாவட்டத்தை பொருத்தவரையில் வழிப்பறி, திருட்டு, போதை பொருள் விற்பனை செய்தல் மற்றும் ரவுடிசம் செய்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், தொடர்ந்து இது போன்ற குற்றச்சாட்டுகளில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் எச்சரிக்கை செய்திருக்கிறார்.