சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியாத 223 நபர்களிடமிருந்து ரூ.1,16,500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகரில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களான மார்க்கெட் பகுதிகள், அங்காடிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் ஏனைய பொது இடங்களில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939-ன்படி ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி சார்பாக கடந்த நேற்று முன்தினம் தெரிவித்தது.
அதே போல சென்னை மெட்ரோ இரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்து பயணிக்க வேண்டுமென்றும், மெட்ரோ இரயில் நிலையங்களுக்கு வந்து செல்லும் பயணிகளும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னையில் சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிகை அதிகரிப்பு காரணமாக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் மாநகராட்சியின் சார்பில் அந்தந்த வார்டுக்குட்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு முகக்கவசம் அணியாத நபர்களிடமிருந்து நேற்று முதல் ரூ.500 அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் மாநகராட்சியின் குழுக்களின் மூலம் நேற்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் முகக்கவசம் அணியாத 223 நபர்களிடமிருந்து ரூ.1,16,500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் மக்கள் தவறாமல் முகக்கவசம் அணித்து வெளியில் வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.