கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் உள்ள கோடியூர் காடுவெட்டி பகுதியைச் சேர்ந்த பொறியாளர் அனுராஜ் (26). குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் அன்று பிரமாண்ட குடில் அமைப்பது வழக்கம்.
இவர் தனது நண்பர்களுடன் கடந்த 23ம் தேதி கிறிஸ்துமஸ் குடிலை பார்வையிட சென்றுள்ளார். அப்போது அவரது பைக் காட்டாத்துறை பகுதியில் விபத்துக்குள்ளானதில் பலத்த காயம் அடைந்தார். நண்பர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.
அனுராஜுக்கு இன்று காலை நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது. இந்த நிலையில் அவர் பூரண குணமடைவார் என்ற நம்பிக்கையுடன் இரு குடும்பத்தினரும் காத்திருந்தனர்.
ஆனால், அனுராஜ் உயிரிழந்தது அவரது குடும்பத்தினருக்கு சோகத்தை ஏற்படுத்தியது. அனுராஜும் உடல் தானம் செய்ய விருப்பம் தெரிவித்ததால், அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்படும் என அனுராஜின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.