உலகிலேயே இந்தியாவில் தான், அதிக அளவில் நீரழிவு நோய் ஏற்படுகிறது என்று ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. அதிலும், இளம் வயதிலேயே இந்திய நாட்டில் இருப்பவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கு கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கின்ற உணவுப் பொருளை நாம் சாப்பிடுவது தான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
இதற்கு முன்னெல்லாம், 40 முதல் 50 வயதுக்கு மேலே இருப்பவர்களுக்குத்தான் நீரிழிவு நோய் இருக்கிறதா? என்று பரிசோதனை செய்ய சொல்வார்கள். ஆனால், தற்போது 25 முதல், 30 வயதை தாண்டிய உடனே நீரிழிவு நோய் இருக்கிறதா? என்று பரிசோதனை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
முற்காலத்திலெல்லாம், உணவு சாப்பிடுவதற்கு ஏற்றவாறு, உடல் உழைப்பு மனிதர்கள் இடையே காணப்பட்டது. ஆனால், அளவுக்கு அதிகமான கொழுப்பு சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டாலும், அந்த கொழுப்பை கரைக்கும் அளவிற்கு உடல் உழைப்பு இருந்தது.
மேலும், பசி உணர்வு வந்த பிறகு சாப்பிடும் பழக்கமும் காணப்பட்டது. ஆனால், தற்போது நினைக்கும் போதெல்லாம் சாப்பிடும் வழக்கம் வந்துவிட்டது. அதிலும், கொழுப்புகள் நிறைந்த உணவை சாப்பிடுவது, சாப்பாட்டிற்கு ஏற்ற உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது போன்றவைதான், நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.
முறையான உணவு பழக்க, வழக்கம் மற்றும் சரியான உடற்பயிற்சி, ஆகியவை இருந்தால், இளம் வயதிலேயே நீரிழிவு நோய் வருவதை தடுக்க முடியும் என்று மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.