மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், தனது மனைவி வீட்டுவேலை செய்யாமல் எப்போதும் போனில் பேசிக்கொண்டிருப்பதாகக் குற்றம்சாட்டியிருந்தார். ஆனால், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அந்த மனுவில், தனது மனைவி வீட்டு வேலைகளைச் செய்யாமல் எப்போதும் அவரின் தாயாருடன் போனில் பேசிக்கொண்டிருக்கிறார். இதனால், தான் சாப்பிடாமல் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது என்று கூறியிருந்தார். மனுதாரரின் மனைவி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், தான் வேலைக்குச் சென்றுவிட்டு வந்த பிறகு வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்ய நிர்பந்திக்கப்படுவதாகவும், தன் பெற்றோருடன் போனில் பேசினால் கணவர் திட்டுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கணவர் தரப்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தனர். நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், ”தற்போதைய நவீன காலத்தில் கணவர், மனைவி இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. எனவே, வீட்டு வேலைகளை இருவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும். வீட்டு வேலைகளை மனைவி மட்டும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது பிற்போக்கு மனநிலையை காட்டுகிறது.
திருமண உறவு மனைவியை அவரின் பெற்றோரிடமிருந்து பிரிப்பதாக இருக்கக் கூடாது. மனைவி தன் பெற்றோரிடமிருந்து உறவை முறித்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. குடும்ப உறவில் ஒருவர் பெற்றோருடன் தொடர்பில் இருப்பதை மற்றொருவர் வேதனையாகக் கருதக்கூடாது. பெற்றோருடனான உறவை முறித்துக்கொள்ள கட்டாயப்படுத்துவது மனைவியை மன ரீதியாக கொடுமைப்படுத்துவதற்கு சமமாகும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.