பள்ளிகளில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்து மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
கல்வி உரிமைச் சட்டத்தில் 2019-ம் ஏற்பட்ட திருத்தம் மூலம் மத்திய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் கட்டாயத் தேர்ச்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், கட்டாயத் தேர்ச்சி கொள்கையில் மீண்டும் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதில், 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் ஆண்டின் இறுதித் தேர்வில் தோல்வியடைந்தால், அவர்களுக்கு இரண்டு மாதத்துக்குள் மறுதேர்வு வாய்ப்பு வழங்கப்படும். அதிலும் தோல்வி அடையும் பட்சத்தில் மீண்டும் அதே வகுப்பிலேயே தொடர்வார்கள்.
தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் கூடுதல் வழிகாட்டுதலை வழங்குவார்கள். இருப்பினும், தொடக்கக் கல்வியை முடிக்கும் முன்னர் எந்த மாணவர்களும் வெளியேற்றப்பட மாட்டார்கள் என்று அரசு உறுதியளித்துள்ளது. இந்த புதிய விதியானது கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா மற்றும் சைனிக் பள்ளிகள் உட்பட 3,000-க்கும் மேற்பட்ட மத்திய அரசால் நடத்தப்படும் பள்ளிகளுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கல்வி விதிகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான முடிவை சம்பந்தப்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகள் எடுத்துக் கொள்ளலாம் எனவும் மத்தியக் கல்வித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தை ஏற்கெனவே 16 மாநில அரசுகள், டெல்லி உள்ளிட்ட 2 யூனியன் பிரதேச அரசுகள் அமல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.