திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும் என முதல்வர் ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பிற மாநிலங்கள் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளும்போது தமிழ்நாடு மட்டும் அதை ஏற்க மறுப்பது ஏன்? தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் மாநிலத்திற்கான கல்வி நிதி விடுவிக்கப்படும்.
புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு ஏற்கவில்லை என்றால் ரூ.2,000 கோடி நிதியை விடுவிக்க முடியாது. அதற்கு சட்டத்தில் இடமில்லை என்றார். மத்திய அமைச்சரின் கருத்திற்கு பதில் அளித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின்; உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில்; “They have to come to the terms of the Indian Constitution” என்கிறார் ஒன்றியக் கல்வி அமைச்சர். மும்மொழிக் கொள்கையை ‘rule of law’ என்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? எனக் கல்வி அமைச்சரால் கூற முடியுமா? மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம்! ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதுதான் கல்வி. அதற்கு ஒன்றிய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல.
மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது” என்று Blackmail செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம். உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.