கோவையை சேர்ந்த தொழிலதிபர் மார்ட்டின், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனையில் முக்கிய நபராக திகழ்ந்து வருகிறார். இந்த சூழ்நிலையில் தான், கடந்த 2019 ஆம் வருடம் கோவையில் இருக்கின்ற அவருடைய வீடு உட்பட அவர் தொடர்பான 70 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில், கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் தான், நேற்று காலை 7 மணி அளவில் கோவையில் உள்ள மார்ட்டின் வீட்டிற்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்போடு, வருமானவரித்துறையினர் வந்து சோதனை நடத்தினர். மேலும், வருமானவரித்துறை அதிகாரிகள் மூன்று குழுக்களாக பிரிந்து சென்று மார்ட்டின் வீடு, ஹோமியோபதி கல்லூரி மற்றும் அலுவலகம் போன்ற பகுதிகளில் சோதனை நடத்தியதாக தெரிகிறது.
அதே போன்று, கோவை கிராஸ்கட் ரோடு 6வது தெருவில் இருக்கின்ற மார்ட்டின் அலுவலகத்திற்கு சென்று சோதனை நடத்தியதில், பல முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
ஆகவே, மார்ட்டின் தொடர்பான இடங்களில் 2வது நாளாக இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். மார்ட்டின் வீடு, அலுவலகம், கல்லூரி போன்ற பகுதிகளில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதே போன்று, தலைநகர் சென்னையில் போயஸ் கார்டன் பகுதியில் உள்ள அவருடைய வீட்டிலும், வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.