வருகின்ற 21-ம் தேதி ஓபிஎஸ் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் 80 சதவீதத்திற்கு மேல் நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டு விரைவில் பொதுக்குழு நடைபெறும் என ஓபிஎஸ் கூறியிருந்தார். சட்டப்போராட்டம் ஒருபுறம் இருக்கக் களத்தில் எடப்பாடி தரப்பை எதிர்ப்பதற்கு பன்னீர்செல்வம் அணியினர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கையாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வரும் 21-ம் தேதி காலை 10 மணிக்கு அதிமுகவின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் முக்கியமாக உச்சநீதிமன்றத்தில் இருக்கக் கூடிய மேல்முறையீட்டு வழக்கு தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும், அதிமுகவில் அடுத்த கட்ட நகர்வு குறித்தும் இந்த ஆலோசனை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.