குடிக்க நினைப்பவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக கள்ளுக்கடைகளை தமிழ்நாடு அரசு திறக்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலை முன்பு நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், ”கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாராய மரணத்தை குறிப்பிட்டு குடி போதையில் இருந்து விடுபட யோகா பயிற்சி உதவி செய்யும். மேலும், தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பிலும் பாடத்திட்டத்தில் யோகா பயிற்சி வழங்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “கள்ளக்குறிச்சி விவகாரத்தில் பலரும் குடும்பமாக பாதிக்கப்பட்டுள்ளனர். சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு பணம் கொடுக்கவில்லை. அவர்களின் குடும்பத்திற்கு உதவி செய்யும் வகையில் தான் பணம் கொடுக்கிறோம். சடங்கு செய்ய கூட அவர்களிடம் பணம் இல்லை. அவர்கள் கஷ்டத்தில் இருந்து வெளியே வரவே நிதியுதவி செய்கிறோம்.
பாஜக சார்பிலும் ஒரு லட்சம் அறிவித்துள்ளோம். பணம் அதிகம் உள்ளவர்கள் யாரும் கள்ளச்சாராயம் குடிப்பதில்லை. தமிழ்நாட்டில் பூரண மது விலக்கு சாத்தியமில்லை. எனவே, கள்ளுக் கடைகளை கொண்டு வரும் நேரமிது. குடிக்க நினைப்பவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக கள்ளுக்கடைகளை தமிழ்நாடு அரசு திறக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளை பொறுத்தவரை முதலில் 1000 கடைகள் அடைக்கப்பட வேண்டும். படிப்படியாக மதுக்கடைகளை குறைக்க வேண்டும்” என தெரிவித்தார்.