கள்ளகுறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் சிலர் கள்ளச்சாராயத்தை குடித்த நிலையில், அவர்களுக்கு நள்ளிரவு முதல் உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுவரை 39 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், பலர் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க கள்ளச்சாராயம் குடித்த சிலர் மருத்துவமனைக்கு வருவதற்கு பயந்துகொண்டு வீட்டிலேயே இருப்பதாக அரசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மருத்துவத்துறையும், காவல்துறையும் இணைந்து சிறப்பு குழுக்களை ஏற்பாடு செய்து கருணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டு, சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், கருணாபுரம் கிராமத்தில் சுரேஷ் என்ற நபர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இவரது இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கும் பாக்கெட் சாராயம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்கள் சுரேஷ் எந்த காரணத்திற்காக உயிரிழந்தார் என்பதை அறியாமையில் அங்கு விநியோகிக்கப்பட்ட பாக்கெட் சாராயத்தை வாங்கிக் குடித்துள்ளனர். இதனால் கள்ளச்சாராயம் குடித்தவர்கள், இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கள்ளச்சாராயம் விற்கப்பட்ட நிலையில், இச்சம்பவத்திற்கு முன்னதாகவே சிலர் பாக்கெட் சாராயத்தை வாங்கி வீடுகளில் வைத்துள்ளனர். அதுபோன்று கல்வராயன் மலைப்பகுதியைச் சேர்ந்த சிலர் தங்கள் வீட்டில் பாக்கெட் சாராயத்தை இருப்பு வைத்துள்ளனர். நேற்றைய தினம் கள்ளச்சாராய மரணம் தொடர்பான செய்திகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதை பார்த்தபோதும், வாங்கி வைத்திருந்த சாராயத்தை வீணடிக்க மனமில்லாத சிலர், தங்கள் வீட்டில் இருப்பு வைத்திருந்த சாராயத்தை பருகி உள்ளனர். அப்படி பருகியதாகக் கூறி பெண் உள்பட 5 பேர் இன்றைய தினம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Read More : ’தமிழக அரசு, காவல்துறையின் அலட்சியப் போக்கே கொடுந்துயரத்திற்கு காரணம்’..!! இயக்குனர் பா.ரஞ்சித் கண்டனம்..!!